Pages

Wednesday, September 5, 2018

பிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்

.
குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள் குழந்தைச் செல்வமும் ஒன்று என அனைவராலும் நம்பப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு வளனும் நலனும் வேண்டிச் செய்யப்படும் சடங்குகள்"பிறப்புச் சடங்குகள்" எனப்படும் வள்ளுவர் குழந்தைச் செல்வத்தின் சிறப்பை எடுத்துக் காட்டும் போது
“ குழாலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச் சொற் கேளாதவர்” (குறள்.66)
' படைப்புப் பல படைத்து " எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலடிகளும் குழந்தைப் பேற்றின் சிறப்பை விளக்குவதாக அமைந்துள்ளது.



பிறப்புடன் இணைந்த சடங்குகள் தொடர்பான இலக்கியச் சான்றுகள்
பெண்கள் கருவாய்க்க வேண்டும் என்று கடவுள்களுக்கு வழிபாடுகள் இயற்றியுள்ளனர். அது தொடர்பாக பல்வேறு சடங்குகளையும் மேற்கொண்டு உள்ளனர் என்பதற்கு இலக்கியங்களில் சான்றுகள் காணப்படுகின்றன.
 'கரு வயிறு உறுக”எனக் கடம்படுவோரும்.
மகளிர் தமக்குக் கருவாய்க்க வேண்டும் என்று தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் பூண்டுள்ளனர். பெருஞ்சேரல் இரும் பொறை தன் தேவியுடன் செய்த பெரு வேள்வியால் கருவுற்றாள் என்பதை பதிற்ருப் பத்து கூறுகிறது.
'குன்றக் குறவன் கடவுட் பேணி
இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள்” (ஜங்.257)
என்பது கடவுளைப் பேணிக் குறவன் ஒருவன் பெண்மகவு ஈன்றமை பற்றிக் கூறுகின்றது.

குழந்தை கருவில் உள்ள பெண்களும் குழந்தை நலனுக்காக வழிபாட்டுச் சடங்குகளில் ஈடுபட்டுள்ளனர். சூல் கொண்ட மகளிர் தேவராட்டியுடன் நின்று மடை கொடுத்தல் மரபாக காணப்படுள்ளது இதனை
"ஒண்சுடர் விளக்கம் முந்துற மடையொடு
நல்மா மயிலின் மென்மெல இயலி
                  கடுஞ்சூல் மகளிர் பெணி கைதொழுது..”     (மதுரைக். 604 -610)
 என்னும் பாடலடிகள் காட்டி நிற்கின்றன. மகப் பெற்ற மகளிர் அணங்கு முதலிய அண்டாவண்ணம் காப்பாற்ற நெய்யுடனே வெண்சிறு கடுகை மாளிகையிடத்தே பூசி வக்கின்றனர். னறும்புகையும் புகைத்தல் உண்டு. குழந்தைக்கு மையும் தீடுகின்றனர்.ஈன்றணிமை நீங்கிய பின் மகப் பெற்ரார் குளத்து நீரில் சென்று குளிப்பர். புதல்வரிகளை ஈன்ற மகளிர் நீராடுதலை 'பொலிந்த சுற்றமொடு வளமனை மகளிர் குளனீர் அயர்' என்பதனால் அறியலாம்.மகவீன்ற மனையில் மகளிர் நன்னிமித்தம் பார்த்து விரிச்சி கேட்டு நிற்றலும் பிறந்த மகவைச் செவிலி பேணித் தம் பக்கல் அணையில் வைத்துப் பாதுகாத்தலும் போன்ற முறமைகள் பற்றி நற்றினைப் பாடல்கல் வெளிக்காட்டிகின்றன.

குழந்தைகளுக்கு பெயரிடும் ஒரு வழக்கமும் இருந்துள்ளது.தம் தந்தையின் பெயரையே புதல்வனுக்கு இடுவதும் மரபும் காணப்பட்டது.
'அகன் பெருஞ்சிறப்பின் தந்தை பெயரன் '. (ஜங்.403:3)
'முதல்வன் பெரும்பெயர் முறையுளிப் பெற்ற
புதல்வற் புல்லிப் பொய்த்துயில் துஞ்சும்' (கலி.75:24-25)
மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம்" (கலி.75:81-35)
பாட்டன் பெயர் பெறும் மக்கள் அக்குடிக்குரிய உரிமையையும் பெறுவோராகின்றனர்.
'ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே '(புறம். 3122;1-2)
என்றபடி தந்தை குழந்தையைச் சான்றோனாக ஆக்குதற்கு அவனுக்கு வெண்டிய கல்வி அளிக்கின்றான். ஆசிரியரிடம் கல்வி கற்க்கும் போது அதற்க்குரிய காணிக்கை செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
குழந்தை பிறந்த நாளைப் பெரிதும் கொண்டாடுவர். மன்னர் தமது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுவதிலிருந்து மக்களிடையே அவ் வழக்கம் பயின்றிருந்தது எனக் கொள்ளலாம். னனன் என்பான் தனது பிறந்த நாலில் கோண்டாடிய செரி விழாவை உவமையாக எடுத்துக் காட்டிகிறது மதுரைக்காஞ்சி "பேரிச்சை நன்னன் பெரும் பெயர் நன்னாள் சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு" (மதுரை.618-619). இவ் வகையில் இலக்கியங்களில் பிறப்பு சடங்கு தொடர்பான கருத்துக்களை சான்றுகளாக நோக்கலாம்.
இப் பிரதேசத்தில் குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பவதியாகி விட்டால் அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.உணவு உடை விடயங்களில் அப்பெண்ணுக்கு சிறப்பான கவனிப்புக்கள் வழங்கப்படும். கர்ப்ப காலங்களில் உணவுகளில் மிகுந்த கவனம் பேணப்படும். சத்துள்ள உணவுகள் அதிகளவில் வழங்;கப்படும.; முன்னைய மனைவி கர்ப்பவதி ஆகிவிட்டால் கணவன் முகச்சவரம் செய்யக்கூடாது என்ற நம்பிக்கை காணப்பட்டது. குழந்தை பிறக்கும் வரை முகச்சவரம்  செய்யாமல் ஆண்கள் இருந்தனர். இவ் நடைமுறையானது இன்று பெருமளவில் பின்பற்றப்படுவதில்லை. ஒரு சில பேர் மட்டுமே பின்பற்றுகின்றனர்.  குழந்தை பிறப்பதற்கு முதலே சடங்குகள் ஆரம்பமாகி விடிகின்றன இவ் வகையில் ஆனைகோட்டை மக்கள் பின்பற்றுகின்ற பிறப்பு தொடர்பான முதல் சடங்கு எனப்பார்க்கின்ற பொழுது சரக்குவகை சேகரித்தல் சடங்கு ஆகும்

சரக்கு வகை சேகரித்தல் : ஆனைகோட்டை பிரதேச மக்கள் பிள்ளைப் பேற்றுக் காலத்தில் பயன்படுத்தப்படும் சரக்கு வகைகளை முன்கூட்டியே வாங்கி வைத்தல் என்னும் ஒரு சடங்கினை மேற்கொள்ளுகின்றர்கள். இதனை நாட்சரக்கு வாங்குதல் என்பர்.கற்ப்ப காலமாகிய 8ம் 9ம் மாதங்களில் வாங்குவர்கள். நல்ல நாள் பார்த்து (அமாவசை கரி நாள் அட்டவ நவமி இல்லாத நாள் பார்த்து இந்த நிகழ்வினை மேற்கொள்ளுவார்கள்.
மருத்துவிச்சியை அழைத்தல் : முக்காலங்களின் குழந்தைகள் வீட்டில் பிறக்கும். அதற்காக மருத்துவச்சியை அழைத்தல் என்னும் சடங்கினை மேற்கொள்ளுவார்கள். பிரசவத்திற்குரிய நாளில் வயிற்றுநோ வந்ததும் கணவன் மருத்துவிச்சியிடம் சென்று அழைத்து வருவார். பின் குடிமகனான வண்ணானுக்கு அறிவிப்பார். குழந்தை பிரக்கும் அறையில் நிறை நாழி வைப்பர். குழந்தைசில நாளையின் பின் அம்மட்டனுக்கு நிறை நாழியை வழங்குவார்கள். பிறந்த குழந்தை ஆண்குழந்தை என்றால் ஒரு தடியைக் கையில் எடுத்து வீட்டுக் கூரையில் அடிப்பர். பெண்குழந்தை பிறந்தால் உரலில் உலக்கை கொண்டு இடிப்பார்களாம். என்று ஆய்வுப் பிரதேச மக்களிடம் நேர்காணலின் போது அறிந்து கொண்டேன். மருத்துவிச்சி குழந்தையை வாழ்த்தி பாட்டும் பாடுவார்.
“ நெல்லுப் பொதியோடும் வந்தீரோ - தம்பி
நெல்லு மலை நாடும் கண்டீரோ - தம்பி
உள்ளிப் பொதியோடும் வந்தீரோ - தம்பி
உள்ளி மலை நாடுங் கண்டீரோ - தம்பி
அரிசிப் பொதியோடும் வந்தீரோ - தம்பி
அரிசி மலைனாடுங் கண்டீரோ - தம்பி
வேந்தர்க்கு வேந்தராய் வந்தீரோ - தம்பி
வேந்தர் தம் மணிமுடியும் கண்டீரோ - தம்பி”
(கணபதிப்பிளளை.கஇ1996:154).
இம் முறைமை இற்றைக்கு மூன்று தலைமுறைக்கு முன் நடைமுறையில் இருந்தது ஆனால் தற்காலதில் வைத்தியசாலையில் குழந்தைகள் பிறப்பதால் இம் முறைமுற்றாக இல்லாமல் போய்விட்டது.
ஆனைகோட்டை பிரதேசமக்கள் குழந்தை பிறந்தது முதல் சடங்குகலை பின்பற்றி வருகின்றனர். இங்கு ஆண் குழந்தை பிறந்தால் கற்கண்டும் பெண் குழந்தை பிறந்தால் இனிப்பும் கொடுத்து மகிழ்வது முன்பிருந்து தொடர்ந்து வரும் பண்பாடாக உள்ளது.மேலும் தமது மகிழ்வினாஇ மெளும் வெளிப்படுத்தும் வகையில் தற்காலத்தில் ஆப்பிள் கேக் போன்ற பிற பொருட்களும் வழங்குவது உண்டு. இம்முறை தங்களுக்கு குழந்தை பிறந்ததை உற்ற உற்றவினர்களுக்கு அறிவிப்பதாக அமையும்.இவ்வறு இனிப்புக்கள் வழங்கினால் சுற்றத்தவர்கள் அக்குழந்தையை வந்து பார்க்கும் மரபும் காணப்படுகிறது.

கொத்திக்குக் கழித்தல் : முதல் ஜந்து நாளும் பெண் சாப்பிடும் போது கொஞ்சம் உணவை எடுத்துக் கால்மாட்டில்  வைப்பார்கள். வைத்த உணவை ஒரு பெட்டியில் எடுத்து தாயையும் பிள்ளையையும் சுற்றித் துப்பி மாலை நேரம் ஆட்கள் அடங்கக் கண்காணாமல் கழித்தல் இடம் பெறும். இதுவே கொத்திக்குக் கழித்தல் என்பர்கள். கொத்திப்பேய் குழந்தைக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க இச் சடங்கு நிகழ்த்தப்படும். ஆனைக்கோட்டை பிரதேசத்தை பொறுத்த வரை இச் சடங்கு முறை இற்றைக்கு 80 ,90 வருடங்களுக்கு முன்னர் இருந்தாகவும் இன்று இச் சடங்கு முற்று முழுதாக இல்லாமல் போய் விட்டதாகவும் மக்கள் கூறினர்.

31ஆம் நாள் சடங்கு : குழந்தை பிறந்ததும் செய்யப்படும் முதல் சடங்கு 31ஆம் நாள் சடங்கு ஆகும். ஆனைகோட்டை பிரதேச மக்கள் இந் நிகழ்வை முப்பத்தொன்று என்றும் துடக்கு கழிவு என்றும் குறிப்பிடுகின்றனர். அன்றைய தினம் வீட்டில் இருக்கும் சட்டி ,பானை, உடுப்பு மற்றும் சகல பொருட்களும் கழுவப்படும் கழுவப்படமுடியாத பொருட்கள் வெயிலில் காயவிடப்படும். கிணறு இறைக்கப்படும். வீட்டிலுள்ள அனைவரும் முழுகுவர்.
குழந்தைக்குத் துடக்குமயிர் கழிக்கப்படும். இதற்கு பிரதேசத்துக்குரிய சவரத் தொழிலாளி வீட்டிற்க்கு வருகை தருவார். அவருக்கு அரிசி காய்கறி காசு என்பன அதற்காக வழங்கப்படும். சிலர் கோயில்களுக்கு நேர்த்தி வைத்தால் அன்றைய தினம் மயிர் எடுக்கமாட்டார்கள். அன்று கோயிற்குருக்கள் வந்து புண்ணியாதானம் செய்யும் முறமை இன்றும் உண்டு. குருக்களுக்கு அரிசி, மரக்கறி ,காசு முதலிய தானம் வழங்கும் மரபும் உண்டு. அவர் தரும் புனிதநீர் வீடு வளவு ஆட்கள் அனைவருக்கும் தெளிக்கப்பட்ட வேண்டும். அதன் பின்னரே துடக்கு பூரணமாகக் கழிந்ததாகக் கொள்ளும் வழக்கம் உண்டு. அன்றே பிள்ளைக்கு முதன் முதலில் நகைகள் அணியும் சடங்குகள் இடம்பெறும். பஞ்சாயுதமும் காலில் ஜம்பொன்னால் ஆன வளையம் கறுப்பு வெள்ளை மணி மாலை அரையில் குழந்தையின் தொப்புள்கொடி வைத்து அட்சரக்கூட்டையும் கட்டுவார்கள்.அதே போல் ஏனைய அணிகலங்களையும் அணிவிப்பார்கள்.  அன்றைய தினம் பெரும் விருந்து நடைபெறும். குருக்களுக்கு புண்ணிய தானம் வழங்கப்பட்டது என்பதற்க்காக அன்றைய தினம் மரக்கறி உணவு சமைப்பார்கள். ஆனால் இக் காலத்தில் அன்றைய தினம் மாமிசம் சமைக்கும் முறையும் காணப்பட்டு வருகின்றது. துடக்கு கழிவு நிகழ்வானது பல காரணங்களினால் 21ம்  நாள் மேற்கொள்ளுகின்றனர். பெரும் பாலும் முதற் பிள்ளைக்கு 31 நாளே துடக்கு கழிக்கப்படுகின்றது.

தொட்டிலில் கிடத்துதல் : 31ம் நாள் சடங்கு நிகழ்வில் முக்கியம் பெறும் ஒரு நிகழ்வு தொட்டிலில் போடுதல் ஆகும் . அச்சடங்கில் தாய் மாமனே முதன்மைப்படுகின்றர்.மாமன் தொட்டில் கட்டி போடும் வழக்கம் இருந்து வந்துள்ளது. அது போல் பரம்பரைத் தொட்டிலில் போடும் மரபும் இப் பிரதேசத்தில் காணப்படுகின்ற முறமையாக்கும். பிள்ளைகளுக்கு பேரப் பிள்ளைகளுக்கு என இன்றும் பரம்பரை தொட்டில்களை பேணி வருகின்றனர். தொட்டில் வசதி இல்லாதவர்கள் ஏனை கட்டி அதில் பிள்ளைகளைப் போடும் முறையும் காணப்படுகின்றது. இக் காலத்தில் தொட்டில்கள் நவீன முறமைகளுக்கு ஏற்;ப மாறி வருகின்றன.
நாமகரணம் (பெயரிடுதல்) : ஒரு வகுப்பில் உள்ள ஒரு நபரைத் தனியாக குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையோ அல்லது வார்த்தைகளின் தொகுப்பையோ பெயர் என்று என்று அழைக்கலாம் என்கிறது நுnஉலஉடழியநனயை (எழட 12:815).  தொட்டிலில் பிள்ளையை கிடத்தும்  போது பிள்ளையின் பெயரினைக் மாமன் மூன்று முறை கூறி  கற்கண்டு தண்ணீர் பருக்குவார்கள்.குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் எழுத்தொலிக்கேற்பவும் தெய்வாம்சம் பொருந்திய பெயர்ராகவும் சந்ததி வழித்தோன்றால் பெயராகவும் அமையப்பெறும்.ஆனால் இக் காலங்களில் குழந்தைகளுக்கு பிறந்து 2, 3 நாட்களுக்குள் பெயர் வைத்து வைத்தியசாலையில் பதிவு செய்ய வேண்டி இருக்கின்றது. இக் காலத்துப் பெயர்களும் வடமொழி எழுத்துக்களிலும் நாகரிக செல்வாக்கும் ஏற்ப பெயர்கள் வைக்கப்படுவாதாக காணப்படுகின்றது ஆனால் 31ம் நாள் அன்று தொட்டிலில் கிடத்தும் பொது பெயர் கூறும் மரபும் காணப்படுகின்றது.
 ஆரம்பகாலங்களில் கடவுளுடைய பெயர்களை குழந்தைகளுக்கு வைத்தனர். உதாரணமாக சோமசுந்தரம் விக்னேஸ்வரன் கந்தசாமி  பாலசுப்பிரமணியம் சிதம்பர நடராசா மகேஸ்வரன் உருத்திரன் சந்திரசேகரன்  சரஸ்வதி மகாலட்சுமி பார்வதி அன்னலட்சுமி விஜாதேவி அம்பிகை பரமேஸ்வரி வரலட்சுமி ( 65 75 வயதுடைய இக் கிரமவாசிகளின் பெயர்கள் சில.)

நாற்பத்தோராம் நாள் : நாற்பத்தோரம் நாள் சடங்கு கோயிலுக்கு எடுக்கும் சடங்காகவே இருக்கிறது. 31ம் நாள் துடக்கு நீக்கப்பட்டாலும் குழந்தையும் தாயும் 41ம் நாள் வரை வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.41ம் நாள் அன்றே குழந்தையை முதன் முதலில் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்கள். குலதெய்வ கோயிலுக்கே அல்லது அருகில் உள்ள கோயிலுக்கே கொண்டு செல்வார்கள்.கோயிலிலே விசேட பூசை வழிபாடுகள் ஒழுங்கு செய்வார்கள். குழந்தையை சுவாமி சந்திதானத்தின் கற்பக்கிரகம் முன்னிலையில் வளர்த்தி எடுப்பது வழக்கம். 41ம் நாள் கோயிலுக்கு செல்ல முடியாதவற்கள் இச் சடங்கினை 45ம் நாள் மேற்கொள்வார்கள்.

முடி இறக்கல் : தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த குழந்தை பிறந்த முடியுடன் இருத்தல் கூடாது. அது தீட்டு முடியாகாக் கருதப்படுகிறது. குழந்தை பிறக்கும் போடு அதிக முடியுடன் பிறந்தால் தந்தை கடனாளியாவான் என்றும் முடி எடுத்தல் பின்னர் முடி அடர்த்தியாக வரும் எனவும் மக்கள் கூறினார்.குழந்தைக்கு துடக்கு முடி இறக்குவதற்க்காக கோயில்களுக்கு நேர்த்தி வைப்பார்கள். ஆனைகோட்டை பிரதேச மக்கள் நயினாதீவுநாகபூசணி அம்மன் ஆலயம் சந்திதி ஆலயம் போன்ற ஆலயங்களுக்கும் தங்களுடைய குலதெய்வ ஆலயங்களுக்கும் நேர்த்தி வைப்பார்க்கள். தாய் மாமன் அல்லது பேரன் மடியில் வைத்து முடி இறக்கல் சடங்கினை மேற்கொள்வார்கள். 41ம் நாள் அன்றே அல்லது பெண் பிள்ளை ஆயின் 5 7 9 11 மாதங்களில் ஆண் பிள்ளை ஆயின் 6 8 10 12 மாதங்களில் மேற்கொள்வார்கள். இன் நிகழ்விற்க்கும் நல்ல நாளை தேர்ந்தெடுப்பார்கள். குழந்தை பிறந்த கிழமை நாள் மற்றும்  செவ்வாய் வெள்ளி ஞாயிறுக்கிழமை போன்ற நாட்களில் முடி இறக்கலை மேற்கொள்ளமாட்டார்கள் என  பிரதேசவாசிகள் கூறினார்கள்.

காது குத்துதல் : குழந்தைக்கு மொட்டை அடித்தலும் காது குத்தலும் ஒரே நிகழ்வாக நிகழ்த்தப்படும் . சில வேளைகளில் காது குத்தல் தனி நிகழ்வாகவும் மெற்கொள்வார்கள். இது 31ம் நாள் அல்லது 41ம் நாள் 3ம் மாதம் 5ம் மாதம் 7ம் மாதம் 9ம் மாதம் போன்ற காலங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.இதற்கு பூசை கிரியைகள் மேற்கொள்ளப்படவேண்டிய அவசியம் இல்லை.கோயில்களில் அல்லது வீட்டில் வைத்தே இன் நிகழ்வினை மெற்கொள்ளுகின்றனர். காது குத்தலுக்குரிய ஆசாரியாரே இன் நிகழ்வினை மேற்கொள்வார்கள்.பிள்ளையார் வைத்து நிறைகுடம் வைத்து வணங்கிச் செய்வார்கள்.ஆசாரியாருக்கு இதற்க்காக தானமும் வழங்கப்படும். பெண் குழந்தைகளுக்கு மட்டும் அல்லது ஆண் குழந்தைகளுக்கும் நேர்த்திக்காக ஒரு காது குத்தும் வழக்கம் காணப்படுகின்றது. ஆண் குழந்தைக்கு நேர்த்திக்காக காது குத்தியதாகவும்  பிள்ளைக்கு 5 6 வயதில் அத் தோட்டினை கலட்டி காணிக்கையாக கோயிலுக்கு வழங்குவதாகவும் நேர்காணலின்; போது குறிப்பிட்டார்கள்.

சோறு தீத்துதல் (அன்னப்பிராசனம்) : பிள்ளைக்குரிய சடங்குகளில் சோறு தீத்துதல் சடங்கானது முதன்மையானதாகும். அது அன்னப்பிரசனம் எனவும் அழைக்கப்படும். தாய்ப்பால் மட்டுமே உணவாகக் கொண்டு வளர்ந்து வந்த பிள்ளைக்கு  மற்றைய உணவுகள் கொடுக்க முன்னர் முதன் முதலில் சோறு தீர்த்துதல் என்னும் சடங்கினை மேற்கொள்வார்கள். ஆண் பிள்ளைக்கு 6 ,8, ,10, 12 ம் மாதங்களிலும் பெண் பிள்ளைக்கு 5 ,7, ,9,11 ஆம் மாதங்களில் சோறுதீர்த்தல் நிகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது. இன் நிகழ்வினை கோயில்களிலே பெரும் பாலும் பெற்கொள்வார்கள்.தங்களுடைய குல தெய்வ கோயில்களுக்கும்  நேர்த்திகள் மேற்கொண்ட கோயில்களிலும் மேற்கொள்வார்கள். ஆனைகோட்டை பிரதேசத்தினை பொறுத்த வரை வாராகி அம்மன் கோயில் பிடாரி அம்மன் கோயில் மஞ்சனவபதி முருகன் கோயில் போன்ற கோயில்களில் மேற்கொள்வார்கள். கோயிலுக்கு பிள்ளையை அழைத்துச் சென்று விசேட பூசை ஒழுங்கள் செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட அமுதினை மாமனோ தகப்பனோ பேரனோ குழந்தைக்கு தீர்த்துவார்கள். தமது கைமோதிரத்தினால் அமுதினை தீர்த்தும் வழக்கமும் உள்ளது.

பல்லுக் கொழுக்கட்டை அவித்தல் : பல்லுக் கொழுக்கட்டை அவித்தல் என்னும் சடங்கானது குழந்தைக்கு முதன் முதலில் பல்லு தோன்றிய பின்னர் மேற்கோள்ளப்படும் சடங்காகும் . இதனை உற்ற உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடுவார்கள்.நல்ல நாள் பார்த்து கொழுக்கட்டை அவிப்பர்கள்.கொழுக்கட்டையில் முன்பக்கத்திலே பல்லுப்பல்லாகப் பிடித்து அதன் மேல் பல்லுப் போலத் தேங்காய்ச் சொட்டினை வைப்பர்கள். நிறைகுடம் வைத்து விளக்கேற்றி குழந்தையை பாயிலே இருத்தி தலையில் வெள்ளைத்துணி ஒன்றைப் போட்டு 9  ,11,13 என பலுக்கொழுக்கட்டை மற்றும் பணம் பவுண் நகை பென்சில் பேனா புத்தகம் வைத்துக் கொட்டுவார்கள். இன் நிகழ்விலும் தாய் மாமனே முதன்மைப்படுகின்றர். மாமனே கொழுக்கட்டை கொட்டவேண்டும் என்ற வழக்கம் காணப்படுகின்றது. சுளகினால் கொழுக்கட்டை கொட்டுவதே மரபு ஆனால் இன்று வெள்ளித்தட்டு தாம்பாளம் என்பவ பயன்படுகின்றன. கொழுக்கட்டை கொட்டிய பின் பிள்ளை தட்டிலுள்ள பொருட்களில் எதை எடுக்கிறதோ அந்தப் பொருளை வைத்துக் கொண்டுஎதிர்காலத்தில் இந்தப் பிள்ளை என்ன துறையில் பிரசித்தி பெறும் என எதிர்வு கூறுவார்கள்.உதாரணமாக குழந்தை பேனா அல்லது பென்சில் எடுத்தால் அந்தபிள்ளை இக் குழந்தை கல்;வி துறையில் பிரசித்திபெறும் எனக் கூறுவார்கள். சிலர் இன் சடங்கினை முதலாவது பிறந்த தினத்திலே மேற்கொள்வார்கள். இந்த நிகழ்வு மண்டபங்களிலும் செய்கின்ற முறமை ஏற்பட்டுள்ளது.

ஏடு தொடக்கல் : குழந்தைகளின் கல்வி செயற்பாடுகளுடன் தெடர்புடையதாகவே இச் சடங்கு அமைகின்றது. குழந்தை மூன்று அல்லது ஜந்து வயதை எட்டிய உடன்  இச்சடங்கினை மேற்கொள்வார்கள். இக் காலத்தில் இரண்டு வயதிலே ஏடு தொடக்கப்படுகின்றது. ஏடு தொடக்கப்படுவத்ற்க்கு உகந்த நாளாக விஜயதசமி மற்றும் தைபூசம் கொள்ளப்படுகின்றது. கோயில்களிலும் பாடசாலைகளிலும் இன் நிகழ்வினை மேற்கொள்வார்கள்.
தந்தை ஆலயகுருக்கள் ஆசிரியர் யாரேனும் ஒருவர் இந்த வித்தியாரம்பத்தை மேற்கொள்வார்கள்.ஏடு தொடக்கும் போது பூசைக்குரிய பொருட்களும் பூரணகும்பமும் வைக்கப்படும். ஏடு தொடக்கும் போது ஆசிரியர் முன்னால் ஒரு தட்டில் பச்சையரிசி பரப்பி வைக்கப்பட்டிருக்கும் . அருகில் தேன் கற்கண்டு இருக்கும். அரிசியின் மேல் ஓலைச்சுவடி ஒன்றும் இருக்கும். ஆசிரியர் குழந்தையைத் நமது வலது கைப்பக்கத்தில் இருத்திபிள்ளையின் நாவிலே தேனைத்தொட்டுத் தடவி பிள்ளையின் சுட்டுவிரலை தனது வலதுகையாற்பிடித்து அரிசியில்  “அ ஆ” என அரிச்சுவடியைச் சொல்லிச் சொல்லி எழுதிவிப்பார்.பின்னர் பிள்ளைக்கு ஏடு ஒன்றும் வழங்குவார். பிள்ளை ஆசிரியரை விழுந்து வணங்கி தட்சணை கொடுக்கும். ஆனைகோட்டை பிரதேசமக்கள் தமது பிள்ளைகளுக்கு பிரதேச பாடசாலகளிலும் தமிழ் ஆசிரியரிகளிடமும் ஏடு தொடக்குவது வழக்கம். பிள்ளை இயல் இசை நடனம் மற்றும் நுண்கலை பயில்வர்கள் விஜயதசமி அல்லது சுப முகூர்த்த நாளில் குருவிடம் ஆசி பெற்று தட்சனை  வழங்கி பாடத்தை ஆரம்பிப்பார்கள்.

1 comment:

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...