Pages

Wednesday, November 7, 2018

நயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை

நயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை
யாழ்ப்பாண நகரத்திற்கு தென் மேற்கே காணப்படும் சப்த தீவுகளில் கடல் நடுவே தனிப்பெரும் சரித்திரப் புகழ் வாய்ந்ததாய் கம்பீரமாய் தோற்றமளிக்கும் தீவே நயினாதீவாகும். இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. நயினாதீவானது 5.7 சதுர கிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்டதாக காணப்படுகின்றது. 40 கிலோ மீற்றர் நீளமும் 12 கிலோ மீற்றர் அகலமும் 80 கிலோ மீற்றர் சுற்றளவினையும் கொண்டுள்ளது. அதன் அமைவிடமானது 9° 37' 9.66" அகலாங்கிலும் 79° 46' 18.99" நெட்டாங்கிலும் காணப்படுகின்றது.

இத் தீவானது நாலாபுறமும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் கடலுக்கு அப்பாற்பட்ட எல்லைகளாக வடக்கே அனலைதீவையும், தெற்கே நெடுந்தீவையும், கிழக்கே புங்குடுதீவையும் மேற்கே விரிந்து பரந்து செல்லும் இந்து சமுத்திரத்தையும் கொண்டுள்ளது. இது யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப்பகுதி தெற்குப் பிரதேசச் செயலகத்தின் நிர்வாகப் பிரிவுக்கு உட்பட்டது. இத் தீவானது எட்டு வட்டாரங்களையும் J/ 34,  J/35,  J/36 என்ற மூன்று கிராமசேவகர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.


புத்தர் விஜயம்.
புத்தர் பகவான் ஞானமடைந்து ஜந்தாவது ஆண்டில் ஜேதவனத்தில் வசித்துக் கொண்டிருந்த போது ரத்தின சிம்மாசனத்திற்காக நாகர்களான மகோதரன், சூளோதரன் என்னும் மாமன், மருமகன் போரிட்டனர். இதன் போது புத்தர் சைத்ர மாதம் கிருஷ்ண பட்சத்தில் உபோசத தினத்தன்று அதிகாலையில் புனிதமான பிட்சா பாத்திரத்தையும் ஆடையையும் எடுத்துக் கொண்டு நாகர்களிடம் இரக்கம் கொண்டவராக நாகதீபத்தையடைந்தார்.
யேதவன என்றும் புத்தர் விகாரையிலிருந்து புறப்படும் போது ஜேதவன விகாரையின் வாசலில் அமைந்திருந்த கிரிபளு என்னும் இனத்திலான ஆலமரத்தில் குடிகொண்டிருந்த சமித்திசுமன என்னும் தெய்வத்தினால் அந்த மரத்தினை பிடுங்கி அதனை புத்த பகவான் மீது ஓரு குடை வடிவில் பிடித்துக் கொண்டு நாகதீபத்துக்கு வந்தனர்.
போர்க்களத்தில் நாகர்களை அச்;சுறுத்தும் படி அடர்ந்த இருளைக் கவ்வச் செய்தார். மீண்டும் அங்கு ஒளி பரவச்செய்தார். பின்னர் அவர்களின் அச்சம் தீர்த்து சமதான நெறியைப் போதித்தார். போரிட்ட இரண்டு நாகர்களும் மகிழ்வுடன் ஒன்றுபட்டு தங்கள் சண்டைக்குக் காரணமாக இருந்த சிம்மாசனத்தை புத்தருக்கே அளித்தனர். நாக மன்னர்கள் அளித்த அழுதன்ன உணவையும் பானத்தையும் அருந்தினார் புத்தர்.
சமுத்திரத்திலும் நிலத்திலும் வசித்த எண்பது கோடி நாகர்களுக்கு உபதேசம் செய்து திரிசரணமளித்து தமது பஞ்சசீலத்தில் ஈடுபடுத்தினர். புத்தர் ராஜாளதன விருட்சத்தையும், ரத்தின சிம்மாசனத்தையும்; நாக மன்னர்களிடம் அதே இடத்தில் வைத்து பூசிக்குமாறு செல்லி ஜேதவனத்திற்குச் சென்றார். (சங்கரன், 1962 : 18)
மணிமேகலை என்னும் நூலில் வரும் சில ஆதாரங்கள் புத்தர் வருகையுடன் தொடர்புபடுகின்றன.
“பெரியவன் தோன்றாமுன்னர் இப்பீடிகை
கரியவன் இட்ட காரணம் தானும்”
(காதை 25 வரி 54 -55)
புத்தர் வருகை தந்த இடமாகவும், புத்த பீடிகை இருக்கின்றது என்ற காரணத்தாலும் இங்கு பௌத்த விகாரை அமைக்கப் பெற்று பௌத்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றார்கள்.
பௌத்தம்
புராதன தீவகத்திலே வாழ்ந்த திராவிடர் குறிப்பாகத் தமிழர் மத்தியிலே ஆதியில் இந்து சமயம் நிலவியிருக்கலாம். பின்னர் தீவகத்திலும் பௌத்தம் பரவியிருக்கலாம். இதனை புத்தர் நாக அரசர்களின் போரினைத் தீர்த்து வைத்து உபதேசம் செய்து திரிசரணமளித்து தமது பஞ்சசீலத்தில் ஈடுபடுத்தினர். புத்தர் ராஜாளதன விருட்சத்தையும் வணங்கக் கொடுத்தார் என்பதற்கு அமைய அவ் நாகர் பௌத்த நெறியைப் பின்பற்றுபவர்களாக மாறியிருக்கலாம்.
இதனால் புராதன இலங்கைப் பௌத்த மரபிலே நாகதீப குறிப்பாக நயினாதீவு ஒரு முக்கியமான பௌத்த நிலையமாகக் கூறப்பட்டுள்ளது. இதைவிட பியங்குதீப என ஒரு சாரர் கருதும் புங்குடுதீவும், காரைதீவிலும் நெடுந்தீவிலும் பௌத்தம் நிலவிய இடங்களாகச் செல்லப்படுகின்றது.
தமிழ்நாட்டு பௌத்த மரபினை அடிப்படையாகக் கொண்டெழுந்த மணிமேகலையிலே கூறப்படும் மணிபல்லவம் நயினாதீவு எனப் பொதுவாக அடையாளம் காணப்படுகின்றது. மணிமேகலை, ஆபுத்திரன், அட்சயபாத்திரம் பற்றிய ஜதீகம் இன்னும் நயினாதீவில் உள்ளன. எனவே தென்னிந்திய இலங்கைப் பௌத்த மரபுகள் தீவகத்திலும் சங்கமித்துள்ளன எனலாம். அக் காலகட்டத்தில் வாழ்ந்த பௌத்தர்களிற் பலர் தமிழர் எனலாம்.


கண்ணகி வழிபாடு.
திராவிட மக்களிடம் கற்புக்கடம்பூண்ட பொற்புடைத் தெய்வமாக கண்ணகிக்கு வழிபாடு தோன்றி இருக்கின்றது. சேரன் செங்குட்டுவன் சேர நாட்டிற் கண்ணகிக்கு விழாவெடுத்த போது இலங்கை கயபாகு மன்னனும் சென்றான். அவ்வகையில் சென்ற கஜபாகுவே ஈழத்திற் கண்ணகி வழிபாடு தோன்றி வளர்ச்சி பெற காரணமாயிருந்தான்.
கண்ணகி வழிபாடு ஈழத்திற்கு கொண்டு வரப்பட்டதும் அது சிங்கள, தமிழ் மக்களிடையே நிலைத்து வளரலாயிற்று. தமிழ் மக்களிடையே கண்ணகி வழிபாடெனவும் சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடாகவும் மலர்ந்தது.
கயவாகு வேந்தன் ஈழத்துக்கு திரும்பிய போது சம்புத்துறை வழியாகவே வந்திருக்க வேண்டும். சம்புத்துறை வழியாக வந்த கயபாகு வேந்தன் முதன் முதலாக கந்தரோடையில் உள்ள அங்கணாமைக்;கடவையில் பத்தினிக் கோயில் அமைத்தான் என சி. இராசநாயகம் குறிப்பிடுகின்றார்.
ஆயினும் பாண்டியனால் பல துண்டங்களாக வெட்டப்பட்ட கோவலனைக் கண்ணகி சேர்த்தெடுத்துத் தைத்து உயிரளிக்கக் கோவலன் எழுந்திருந்து
“மாதவியோ கண்ணகியோ வந்தவர்கள் படுகளத்தில்
மாதவியாள் வந்தாலே வாடியென் மடிமேல்”
எனக் கூறினார். இதனால் மாதவியின் பெயரை முதலில் குறித்துக் கேட்டானே என்று மனமுடைந்து கோபம் கொண்டு கண்ணகி தன்னை ஜந்து தலை நாகமாக மாற்றி மதுரை மாநாகரம் துறந்து தெற்கு நோக்கி ஊர்ந்து சென்று முதலில் நயினாதீவில் தங்கினாள். பின்னர் வட்டுக்கோட்டைபாங்கரில் உள்ள கருட்டுப்பனை  வழியாக சீரணி, அங்கணாமைக்கடவை, அளவெட்டி, சுருவில், முதலான இடங்களிற் தங்கினாள் என்ற ஜதீகம் வழக்காற்றில் இருந்து வருகின்றது. (சற்குணம், 1976 : 115.)
ஜந்தலைநாகம் நகர்ந்து சென்ற வழி வழுக்கியாற்றுப் பள்ளமாக மாறிய தென்பர். இவ்விடங்களில் அமைந்த கோயில்களில் எல்லாம் ஜந்தலைநாக சந்நிதானமும,; அம்மன் சந்நிதானமும் அமைந்திருக்;கின்றன. சீரணியில் உள்ள கோயில் நாகம்மாள் கோயில் எனவும் அளவெட்டி சுருவில் கோயில் நாகதம்பிரான் கோயில் எனவும் வழங்கப்படுகின்றன.
நாகதீவில் இருந்து புறப்பட்ட கண்ணகி கோப்பாய், மட்டுவில், வேலம்பிராய், கச்சாய் வழியாகக் சென்று நாகர்  கோயிலை அடைந்தாள் என்றும் வேறு சிலர் கூறுவர். பின்னர் கரைச்சியில் உள்ள புளியம் பொக்குணையை அடைந்து பின்னர் வற்றப்பாளையை அடைந்தனள்; என்பர்.
ஈழத்திற் கண்ணகி வழிபாடு ஒரு வழிபாடாக நிலைத்து விட்டாலும் இவ்வழிபாட்டை ஆறுமுகநாவலரும் அவரது சகாக்களும் ஆதரிக்கவில்லை. எனவே கண்ணகி கோயில்கள் நாகேஸ்வரி, நாகபூஷணி, ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலான மாற்றப்பட்டதாக அறிமுடிகின்றது.


ஆபுத்திரனும் அமுதசுரபியும்
மணிபல்லவத்துடன் தொடர்புடைய ஆபுத்திரன் சாவக நாட்டில் ஏற்பட்ட பஞ்சைத்தைப் போக்குவதற்குக் கப்பல் ஏறிச் சாவக நாட்டுக்குக் சென்றான். வழியால் புயலால் கடல் கொந்தளிக்க மாலுமிகள் கப்பலை மணிபல்லவத்தீவில் நிறுத்தினர் . ஆபுத்திரன் கப்பலில் இருந்து இறங்கி யாருக்காவது உதவ முடியுமா என்று அறிந்து வரச் சென்றான். ஆபுத்திரன் வந்து விட்டான் என்று நினைத்து கப்பல் புறப்பட்டுச் சென்றது.
மணிபல்லவத்தீவிலும் இவன் உணவைப் பெறக்கூடியவர்கள் எவருமிலர். இவன் அமுதசுரபியைக் கொண்டு தன்னுயிரை மட்டும் காத்துக் கொள்ள விரும்பாது அமுதசுரபியை கோமுகிப் பொய்கையில் “ நீ ஆண்டுக்கு ஒருமுறை இப் பொய்கையிலிருந்து வெயியே தோன்றுக அருளறம் பூண்டு உயிர்களைக் காக்கும் பேறுடையவர் வருவாராயின் அவரிடம் சென்று தங்குக” என கூறியிட்டான். பின்னர் உண்ணாநேம்பிருந்து தன் உயிரை நீர்த்தான்.


மணிபல்லவத்தில் மணிமேகலை
மணிமேகலை காப்பியத்தின் தலைவி மணிமேகலை. மணிமேகலை கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள். அறவண அடிகள் என்னும் துறவியிடம் அறங்கேட்டுத் தெளிந்து பௌத்தத் துறவியானாள்.
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லத்திற்கு எடுத்துச் சென்று விட்டது. தனித்து விடப்பட்ட மணிமேகலையின் முன் புத்த பெருமானின் மறுவடிமான தருமபீடிகையை வலம் வந்து வணங்கினாள். அதன் பயனால் தன் முந்திய பிறவி பற்றி அறிந்தாள். தான் அசோதர நகர் அரசன் இரவிவர்மனுக்கும் அவன் மனைவி அமுதகதிக்கும் இலக்குமி என்னும் மகளாளப் பிறந்து அத்திபதி அரசன் மகன் இராகுலனை மணந்ததை அறிந்தாள். இராகுலன் “திட்டிவிடம்” எனும் பாம்பு தீண்டி இறந்துவிடத் தான் தீப்புகுந்துமாகிய பழம்பிறப்பினை உணர்ந்தாள்.
மணிபல்லவத்தில் அவள் முன் தீவுதிலகை என்னும் தெய்வம் தோன்றி “கோமுகிப் பொய்கையில் அமுதசுரபி தோன்றும் நாள்; இது. ஆபுத்திரன் கையில் இருந்த அப்பாத்திரம் உன் கைக்கு கிடைக்கும்” என்று கூறி அழைத்துச் சென்று கோமுகிப் பொய்கையை வலங்செய்து வணங்க அமுதசுரபி மணிமேகலையிடம் வந்து சேர்ந்தது. அவ் அமுதசுரபியைக் கொண்டு மணிமேகலை வறியவரின் பசிப்பிணி தீர்க்க வான்வழியே புகார்; சென்றாள் என மணிபல்லவத்தில் மணிமேகலை வருகை தந்த கதையை மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகின்றது.
இன்று கோமுகிப் பொய்கையிலிருந்த இடமாக நம்பப்படுகின்ற இடம் “புத்தர்பள்ளம்” என அழைக்கப்படுகின்றது. கத்தியாள்குடா என்ற இடம் இன்று கத்தியாக்குடாவாக மாறியுள்ளது. இது நயினாதீவின் தெற்குப் பிரதேசத்தில் இப் பெயரை உடைய காணிப்பரப்பு உண்டு. இப் பெயர் மணிமேகலையை மணிமேகலாத் தெய்வம் கொண்டுவந்து விட்டுச் சென்;றபோது தான் இருக்கும் இடம் எதுஎன தெரியாமல் கத்திதிரிந்த இடம் இது எனவும் இதனாலே இப் பெயர் பெற்றதாகவும் கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு.


அர்ச்சுனன் சித்திராங்கனை
பண்டவரில் ஒருவரானாகிய அர்ச்சுனன் பாரந்த நாடு முழுவதும் தீர்த்த யாத்திரை செய்தான் எனவும் அதன்படி தீர்த்தயாத்திரைக்காக மணிபல்லவம் வந்தான் இங்கு நாக கன்னியைக் கண்டு காதல் கொண்டு அவளை மணந்தான். இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தை சித்திரவாகனன். இவன் அசுவமேத யாகத்திற்காகத் திக்கு விஜயம் செய்து தனது தந்தையை வென்றான் எனவும், சித்தரவாகனனின் கொடிகள் சிங்க் கொடியும் பனைக் கொடியும் எனக் கூறப்படுகின்றது. (சங்கரப்பிள்ளை, 1992:25)
இருப்பினும் அர்ச்சுனனுக்கும் சித்திராங்கனைக்கும் பிறந்த பிள்ளையின் பெயர் பப்பரவாகன் என்றும் அவனுடைய பெயரினையே நாகபூஷணி அம்மன் ஆலயம் அமைந்திருக்கும் காணிக்கு இட்டார்கள் என்றும் ஜதீகம் உண்டு. மணிபல்லவம் என்பது நயினாதீவு என்ற ஜதீகத்தில் இக் கருத்து மக்கள் மத்தியில் உள்ளது.


முஸ்லிம் குடியேற்றம்.
இங்கு வாழ்கின்ற முஸ்லிகளது பரம்பரை கீழைக்கரையிலிருந்து வந்தவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஏறத்தாள பல வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியளில் சங்கு குளிக்கும் நோக்குடன் கீழைக்கரையிலிருந்து பல முஸ்லிம் மக்கள் வந்து போவதனை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவ்வாறு வந்தவர்களிலொருவரான முகமது மீராசாகீப் என்பவர் இப்பகுதியில் வாழ்ந்த பொன்னி என்ற தமிழ்ப் பெண்னைத் திருமணம் செய்து கொண்டதுடன் இங்கே தமது பரம்பரையினையும் ஆரம்பித்து வைத்தார். இன்று இப் பகுதியில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் எல்லாரும் அவரது பரம்பரையே தற்போது 43 குடும்பங்கள் இங்கு வாழ்கின்றனர். யாழ்ப்பாணப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் 1990களில் இடம்பெயர்ந்த போதும் நயினாதீவு பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் இடம்பெயரவில்லை என்பது அவர்களின்; சிறப்பாகும்.
1865இல் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இங்குள்ள ஒரேயொரு பள்ளியும் பழைய கட்டடிடக்கலைப் பாணியில் உள்ளதுடன் தென்னிந்தியாவின் கீழைக்கரையிலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களை அப்படியே கொண்டு வடிவமைக்கப்பட்டுக் காணப்படுவது இதன் சிறப்பாகும். இங்குள்ள பௌத்தகோயிலை நிர்மானிப்பதற்குத் தேவையான நிலத்தினை இஸ்லாமியர் ஒருவரே கொள்வனவு செய்து வழங்கியதாக செய்யப்படுகின்றது.
2012 காலப்பகுதியில் அல்லைப்பிட்டியில் சிலையொன்றின் உடைந்த தலைப்பாகத்தை கொண்ட வகையில் கிடைக்கப் கொண்ட வகையில் கிடைக்கப்பெற்றுள்ளது. பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்கள் குறிப்பிடுகின்ற பொழுது அரபிகள் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் சிலைகளை உடைத்திருப்பர். யாழ்ப்பாண முஸ்லிம்கள் இலங்கையில் கி.பி 4ம் நூற்றாண்டிலிருந்;து வாழ்ந்து வந்த அரபிகளின் வழிவந்த முஸ்லிம்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
எகிப்து அல்லது மொரோக்கோ நாட்டு பர்பர் என்றழைக்கப்படும் அரபிகள் தான் யாழ்ப்பாணத்தினூடாக அனுராதபுர அரசர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். இந்த பர்பர்கள் ஒரு காலத்தில் நயினாதீவை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்துள்ளார்கள். அதனால் நயினாதீவு கி.பி 6ம் களில் பப்பரத்தீவு என அழைக்கப்பட்டுள்ளது.


சீனத் தொடர்பு
வேலணையின் மேற்குக்கரையில் அல்லைப்பிட்டி, ஊர்காவத்துறை, நெடுந்தீவு போன்ற இடங்களில் சீனத்தொடர்பினைக் காட்டுகின்ற சான்றுகள் கிடைக்கப் பெறுவது போல் நயினாதீவிலும் சீனத்தொடர்பினைக் காட்;டும் சான்றுகள் கிடைத்துள்ளன.
பப்பரவன்சல்லி என்னும் காணியிற் கிணறு ஒன்று தேண்டிய போது சீனச்சாடிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை 1937இல் கொழும்பு நூதனசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொமுது அவை 12ம் நூற்றாண்டிற் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும் என கூறியுள்ளனர். எனவே பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் சீனாவுக்கும் நயினாதீவுக்கும்; தொடர்பு இருந்தது என்பது புலனாகின்றது.


கற்சில்லு
கோயில் வீதியில் ஒரு கற்சில்லும் இரண்டு பீரங்கிகளும் கிடைக்கின்றன. இந்தப் பீரங்கிகள் ஒல்லாந்தர் காலத்தனவாயிருத்தல் கூடும். இவை இத்தீவின் அயலிலுள்ள ஆழ் கடலில் இருந்தெடுக்கப்பட்டன. கற்சில்லு கப்பல்களின் நங்கூரமாய் உபயோகிக்கப்பட்டிருத்தல் கூடும். போர்த்;துக்கீசர் ஆட்சிக் காலத்திற் கடலுள் உருட்டிவிடப்பட்ட தேர்களின் சில்லுகளுள் ஒன்றாக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.


வெடியரசன் வரலாறு
தென்னாட்டிற் கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த காலத்தில் தீவுப்பகுதிகளை வெடியரசன் எனும் அரசன் ஆண்டு வந்தான் என வெடியரசன் நாடகம் கூறுகின்றது. ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியுடைய வலது தொடையில் உதித்த பிள்ளை தான் குகனென்றும் அவனுக்கு வெடியரசன் என்னும் பட்டத்தையும் கருடக் கொடியையும் நீலகேசி யென்னும் பெண்ணையும் கொடுத்து அவனுக்குச் சகோதரர் நால்வரையும் சிருஷ்டித்துக் கொடுத்தாக நாக நகரை அரசாளும் படி வைத்தார் என்று இந்த நாடக நூல் குறிப்பிடுகின்றது.
இச் சந்தர்ப்பத்தில் மாநாயகன், மாசாத்துவன் மீகாமன் என்னும் மூவரும் கண்ணகிக்கு பாதச்சிலம்பு செய்வதற்கேற்ற நாகரத்தினம் வாங்க நாகதீவை நோக்கி வந்தனர். அத் தீவு வெடியரசன் ஆளுகைக்குப்பட்டது. நாகரத்தினத்திற்காக வந்தவர்களை யுத்தம் செய்ய வந்தவர்கள் என எண்ணி வீரநாயணன், வெடியரசன், வெடியரசனுடைய சகோதரர்கள் போர் செய்தனர். இதில் வீரநாயணன் இறக்கிறான். உண்மையில் அவர்கள் நாகரத்தினம் வாங்கும் பொருட்டு சோழ அரசில் இருந்து வந்தவர்களே அல்;லது யுத்தஞ் செய்ய வந்தவர்கள் அல்லர் என்ற உண்மையினை உணர்ந்து போரை நிறுத்தி நாகரத்தினத்தை வழங்கினர் என அக் கதை கூறுகின்றது. இதனையே
“ நசையாத நாகதீவில் நாகத்தின் மணிவாங்கக்
கசிவான மனதுடனே கடுகவுமை யழைத்தோங்காண்”
என கண்ணகி வழக்குரை காதை அடிகள் குறிப்பிடுகின்றன.


மணிபல்லவத் தொண்டைமான்.
காவரிப்பூம் பட்டினத்து அரசனான கிள்ளிவளவன் பீலிவளை என்பவளுடன் சேர்ந்து அகமகிழ்வு கொண்டான். இப் பீலிவளை நாக நாட்டரசன் வலையவணன் என்பவனின் மகள் ஆவள். தன் மகள் பீலிவளை கருவுற்றிந்ததை அறிந்த வலைவணன் கம்பளைச் செட்டி என்னும் வணிகனுடன் அவளை மணிபல்லவத்திற்கு நாடு கடத்தினான். அவள் மணிபல்லவத்திற்கு வந்து பார்த்த போது அங்கிருந்த நாக நாடும் நாகராஜேஸ்வரி ஆலயமும் அவளுக்கு பூரிப்பை அளித்தது.
அவள் ஆண் மகனை பெற்றெடுத்தாள் அக் குழந்தையை கம்பளைச் செட்டியாரிடம் கொடுத்து பூம்புகாருக்கு அனுப்பினாள். குழந்தை சென்ற மரக்கலம் உடைந்து சிதைந்தது. கடலில் அலையுண்ட குழந்தை ஆnதொண்டைன் கொடியாற் சுற்றப்பட்ட நிலையில் தொன்டைமான் என்றும், திரைகளால் எத்தப்பட்டமைளால் திரையன் என்றும் வழங்கப்பட்டான். அவனே மணிபல்லவத் தொண்டமான் ஆவன். கிள்ளிவளவன் அவனுக்குப் பின் அரசுரிiயை இவனுக்கு வழங்கினான் எனவும் கூறப்படுகின்றது.


1ம் பாரக்கிரமபாகு கல்வெட்டு
1ம் பராக்கிரமபாகு காலத்துத் தமிழ்ச் சாசனமொன்று நாகபூஷணி  அம்மன் கோயில் வளாகத்தில் உள்ளது வணிகர் தொடர்பாக அரசன் வழங்கிய பிரகடன மொன்றை வாசகமாகக் கொண்டுள்ளது. அயல்நாட்டு வாணிபம், பன்னாட்டு வணிகர் என்னும் விடயங்கள் தொடர்பாக அரசன் கடைப்பிடித்த கொள்ளைப் பிரகடனமாக அது அமைகின்றது. நயினாதீவில் கிடைக்கப் பெறுகின்ற பொழுதிலும் ஊர்காவற்துறையில் இடம் பெற்ற வர்த்தகம் தொடர்பாகவே கூறுகின்றது. முதலியார் செ. இராசநாயகம் இதனை வாசித்து பண்டைய யாழ்ப்பாணம் என்னும் நூலில் வெளியிட்டார். இன்று நயினாதீவு நூலகத்துடன் இணைந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


தையலியாசி
கி.பி16ம் நூற்றாண்டளவில் முடிநாகர் குடிமரபில் தோன்றிய தையலியாசி, அனலை என்ற இரு பெண்கள் இருந்ததாகவும் தையலியாசி என்பவள் நயினாதீவை ஆட்சிக்கு உட்படுத்தியதாகவும் அறியக் கிடக்கிறது. அனலை என்பவள் ஆட்சி செலுத்தியதால் அனலைதீவு ஆகிற்று என்றும் கூறுவர். தையலியாசி, நயினாதீவு குடியேற்றப்பிரிவிலும், பரிபாலனப்பிரிவிரும், வர்த்தகப்பிரிவிலும் அதிக அக்கறை கொண்டர். இவரது கணவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த இராமகிருஷ்ண முதலியாரவார். இவர்கள் நயினாதீவு 4ம் வட்டாரத்தில்லுள்ள ஆசியான் பத்தி என்னும் காணியில் குடியிருந்ததாக அறியக் கிடக்கிறது. கி.பி 1675 ஆம் ஆண்டளவில் தையலியாசியின் பிள்ளைகள் நயினாதீவு முதல் முதலியாரகவும் நியமிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...